Wednesday 17 April 2013

பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கும் மத்ஹபுகள்





இஸ்லாத்தின் அடிப்படைகள் திரு மறைக் குர்ஆனும் திரு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளும் தான். ஆனால் நம்முடைய இஸ்லாமிய சமுதாயம் இந்த அடிப்படையை விட்டும் விலகிய காரணத்தினால் எண்ணற்ற பிரிவுகள் இம்மார்க்கத்தில் நுழைந்து அவைதான் இஸ்லாம் என்றும் நம்பப்படுகிறது.

இந்தப்பிரிவுகள் அனைத்தும் இம்மார்க்கத்திற்காக தியாகம் செய்த அறிஞர் பெருமக்களின் பெயரைப் பயன்படுத்தித் தான் உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால் இமாம்களில் எந்த ஒருவரும் என்னைத்தான் பின்பற்ற வேண்டும் என்று கூறவேயில்லை. மாறாக திருமறைக் குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையுமே பின்பற்றுமாறு கூறியுள்ளார்கள்.

இமாம்களின் பெயரால் உருவாக்கப்பட்ட இந்த மத்ஹபு பிரிவுகளினால் நபி (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட நல்ல காரியங்கள் சுன்னத்தான நடைமுறைகள்  கட்டளைகள் மூடிமறைக்கப் பட்டுவிட்டன. அதுமட்டுமல்லாமல் நபியவர்களின் கட்டளைகளுக்கு மாற்றமான காரியங்கள்தான் சரியானவை என்று கருதி நடைமுறைப்படுத்தவும் படுகிறது.
அப்படிப்பட்ட காரியங்களில் ஒன்றுதான் பெண்களை தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு வரவிடாமல் தடைசெய்வது. பெண்கள் அல்லாஹ்வைத் தொழுவதற்காக பள்ளிவாசல்களுக்கு வருவதை தடை செய்வதில்  மிக முக்கிய பங்காற்றுபவர்கள் தமிழக ஜமாத்துல் உலமாவினர்தான். இவர்கள் தங்களுக்கு சான்றாக திருமறை வசனங்களையோ ஹதீஸ்களையோ காட்டமாட்டார்கள், மாறாக தங்கள் பிரிவிற்கென்று உள்ள மத்ஹபு கிரந்தங்களைத் தான் ஆதாரமாக்கு கிறார்கள்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் எண்ணற்ற ஹதீஸ்கள் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுகை நடத்துவதற்கு சான்றாக அமைந்துள்ளது. இதோ அவற்றைத் தருகின்றோம்.
தொழுகையை நீட்டித் தொழவேண்டும் என்று எண்ணி தொழுகையில் நான் நிற்கின்றேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை செவிமடுக்கின்றேன். அக்குழந்தையின் தாயை நான் சங்கடப்படுத்துவதை வெறுத்து, உடனே எனது தொழுகையை சுருக்கி விடுகின்றேன் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி)
நூல்: புகாரி (868, 707)


பிள்ளைக்குட்டிகளுடன் குடும்பம் சகிதம் கூட்டாகவல்லவா கூட்டுத் தொழுகைக்கு வந்திருக்கின்றனர் பெண்கள்? இந்த ஹதீஸை அவர்கள் பார்க்கவில்லையோ? அவர் இதை எப்படி இஸ்லாமிய வழிமுறை இல்லை என்று கூறலாம்.
வல் முர்ஸலாத்தி உர்பன் என்ற 77 வது அத்தியாயத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதும் போது செவிமடுத்த உம்முல் பழ்லு (ரலி) அவர்கள் என்னருமை மகனே இந்த சூராவை ஓதி எனக்கு (பழைய) நினைவை ஏற்படுத்தி விட்டாய். இதுதான் அல்லாஹ்வின் திருத்தூதர் மக்ரிபில் ஓதும் போது நான் செவிமடுத்த கடைசி அத்தியாயமாகும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (763) திர்மிதி (283)


மக்ரிபில் நபி (ஸல்) அவர்கள் அன்று ஓதிய அத்தியாயத்தை இன்று இப்னு அப்பாஸ் (ரலி) ஓதக்கேட்டவுடன் பரவசம் அடையும் இந்த அம்மையார் பள்ளிக்கு வந்திருந்தால் தானே இவ்வளவு பசுமையாக நினைவு கூறமுடியும்.
குரல் கொடுக்கும் ஆண்களும் கைதட்டும் பெண்களும்
சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்குரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) நூல் : புகாரி (1203) திர்மிதி (337)


ஒரே பள்ளியில் ஆண்களும் பெண்களும் தொழும் போது இமாமுக்கு கூட்டுத் தொழுகையில் தவறு ஏற்பட்டால் எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கற்றுத் தருகிறார்களே! வீட்டில் தொழும் பெண்களுக்கா இந்தக் கட்டளைகள்?

பள்ளிக்கு வந்து விட்டு திரும்பும் பெண்கள்
நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன்  பெண்கள் எழுந்து விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருப்பார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூல் : புகாரி (837) (866) (875)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுது முடிந்தவுடன் பெண்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு புறப் படுவார்கள். இருட்டின் காரணத்தினால் அவர்கள் யாரென அறியப்படமாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (867, 372, 578, 872)


பள்ளியில் உறங்கி வழியும் பெண்கள்

நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலி) அவர்கள் கூறியதும் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். "இப்பூமியில் வசிப்பவர்கள் உங்களைத்தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர் பார்த்திருக்கவில்லை'' என்றார்கள். அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (864, 866, 569, 862)

இந்த ஹதீஸ் ஆண்களும் பெண்களும் பள்ளியில் தூங்கி வழிவதைக் காட்டுகிறது.
இமாமின் குறைகளைச் சுட்டிக்காட்டும் பெண்கள்

 எனது தந்தை (இஸ்லாத்தை ஏற்று விட்டு ஊருக்கு) வந்ததும் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ளேன். இன்னின்ன நேரத்தில் இந்த இந்த தொழுகைகளைத் தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகைக்கு அழைக்கட்டும். மேலும் உங்களில்  குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் தொழுகை நடத்தட்டும் என்று கூறினார்கள். அப்போது அவர்கள் (அத்தகுதியுடைய ஒருவரை தேடிப் பார்த்தார்கள்) நான் ஒட்டக வியாபார கூட்டத்தாரிடமிருந்து ஓதத் தெரிந்து கொண்டிருந்ததால் என்னை விட அதிகமாக குர்ஆன் ஓதத் தெரிந்தவர் யாருமில்லை. எனவே தொழுகை நடத்த என்னை முன்னிருத்தினர். அப்போது நான் ஆறு வயதுடையவனாக அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன். 

என் மீது ஒரு போர்வை இருந்தது. நான் ஸஜ்தா செய்யும் போது அது என்னை விட்டு விலகி ( எனது பித்தட்டு தெரிந்து) விடும். அப்போது கூட்டத்தில் உள்ள ஒரு பெண் உங்கள் இமாமின் பித்தட்டை மூட (ஒரு துணி கொடுக்க) வேண்டாமா? என்று கேட்டார். உடனே அவர்கள் எனக்கு ஒரு சட்டையை அளித்தனர். அந்த சட்டையைக் கொண்டு நான் அடைந்த சந்தோஷத்தைப் போன்று வேறு எதைக் கொண்டும் சந்தோஷம் அடைந்ததில்லை.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரலி)
நூல் : புகாரி (4302)

ஒரு பெண் சிறு வயது இமாமிடம் கண்ட குறையை எடுத்துச் சொல்கின்றாரே அவர் இந்த ஜமாத்திற்காக பள்ளிக்கு வந்ததால் தானே இந்தக் குறையைச் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
பள்ளிக்கு வரும் பெண்கள் நறுமணம் பூசக் கூடாது
உஙகளில் ஒருத்தி பள்ளிக்கு வரும்போது நறுமணம் பூசக் கூடாது என்று எங்களுக்கு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அ வர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜைனப் (ரலி)
நூல் : முஸ்லிம் (674)

பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து பள்ளிக்கு ஒரு பெண் தாரளமாக வரலாம் ஆனால் நறுமணம் பூசிக் கொண்டு வரக்கூடாது என்று தானே விளங்க முடியும் . அறவே வரக்கூடாது என்று விளங்க முடியுமா?
கிரகணத் தொழுகையும் பெண்களும்
எனக்கு மயக்கம் ஏற்படும் அளவிற்கு நானும் (கிரகணத் தொழுûயில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டேன்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
நூல் : புகாரி (1053)

பள்ளியில் தொழும் கிரகணத் தொழுகையில் பெண்களும் சேர்ந்து தொழுதிருக்கின்றார்கள் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம். ஆக சாதாரணமான தொழுகையிலிருந்து விசேஷமான தொழுகை வரை பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதற்கான வாய்ப்பை இந்த மார்க்கம் வழங்கியுள்ளது என்பதை தெளிவாக விளங்கலாம்.

இப்னு உமர் (ரலி) அவர்களின் ஆவேசம்
"உங்களுடைய மனைவிமார்கள் (தொழுவதற்காக) பள்ளிவாசலுக்குச் செல்ல  உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களைத் தடுக்காதீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன் என் இப்னு உமர் (ரலி) (தன்னுடைய மகனுக்கு) கூறினார்கள். (அதற்கு அவருடைய மகன்) பிலால் பின் அப்தில்லாஹ் அவர்கள் "அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களைத் தடுப்பேன்” என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரை முன்னோக்கி மிக மோசமாகத் திட்டினார்கள். அது போன்று திட்டியதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. பிறகு " நான் நபியவர்களிடமிருந்து உனக்கு அறிவிக்கின்றேன். நீயோ அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தடுப்பேன் என்று கூறுகின்றாய்'' என்று கூறினார்கள்’
அறிவிப்பவர்: ஸாலிம் பின் அப்தில்லாஹ்
நூல் : முஸ்லிம் (666)

மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் இரவில் பள்ளிக்கு பெண்கள் வருவதைத் தடுக்காதீர்கள் என்று சொன்னதும் இப்னு உமர்(ரலி) அவர்களின் மகனார் பெண்களை வரவிடமாட்டோம் இதை (அப்பெண்கள்) குழப்பம் ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பாக ஆக்கிக் கொள்வார்கள் என்று பதில் சொல்கின்றார். உடனே அவர்ளை கடுமையாக வெறுக்கின்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக சொல்கிறேன்  நீ வரவிடமாட்டேன் என்கிறாயா? என்றும் தன் மகனை நோக்கிக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஜாஹித்
நூல் : முஸ்லிம்(670) 

இந்த பதிலைச் செவியுற்றதும் இப்னு உமர் (ரலி) அவர்கள் தன் மகனின் நெஞ்சில் ஓங்கி அறைந்தார்கள் என்று முஸ்லிமில்  இன்னொரு இடத்தில் (671) இடம் பெற்றுள்ளது.
தான் மரணிக்கும் வரை இப்னு உமர் (ரலி) அவர்கள் தன் மகனுடன் பேசவில்லை என்ற செய்தி அஹ்மது(4696) எனும் நூலில் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்திய செயலுக்கு மாற்றமாக செயல்படுவேன் என்று சொன்ன தன் மகனுடன் தகப்பனார் இப்னு உமர் (ரலி) அவர்கள் தான் மரணிக்கும் வரை பேசவில்லை எனும் போது எந்த அளவுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில் இப்னு உமர் (ரலி) அவர்கள் உறுதியாக இருந்திருக்கின் றார்கள் என்பதை இது நமக்கு உணர்த்துகின்றது.
இப்னு உமர் (ரலி) எப்படி பின்பற்றினார்களோ அப்படித் தான் நாம் நபிகள் நாயகம் (அல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். 

ஜமாத்துல் உலமாவின் ஏமாற்று வேலை

முஸ்லிம் பெண்களில் சிலர் இரண்டாம் கலீஃபா அவர்களின் மனைவியிடத்தில் அனுமதி கோரினாராம். அதற்கு அம்மனைவியார் உமர் (ரலி) அவர்கள் எது செய்தாலும் அதுசரிதான் என்றும், யூதப் பெண்கள் எப்படி வணக்கத் தலங்களில் அனுமதிக்கப்படவில்லையோ அது போல் முஸ்லிம் பெண்களும் அனுமதிக்கப்படக் கூடாது என்று பதில் கூறினாராம். இரண்டு காரணங்களால் இந்தக் கூற்று நிராகரிக்கப்படவேண்டும
முதலாவதாக,

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)

என்ற அல்லாஹ்வின் கட்டளையில் உறுதியாக இருந்த உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் அமல்படுத்திய நடைமுறையை எப்படி மாற்றத் துணிவார்கள்?
இரண்டாவதாக, உமர் (ரலி) அவர்கள் எது செய்தாலும் அது சரி என்று ஒரு அஸ்திவாரத்தைப் போட்டு, உமர் (ரலி) அவர்களை புகழ்வது போன்று ஒரு மாயையைத் தோற்றுவித்து, இச்செய்தியைக் கூறுவது உமர் (ரலி) அவர்களை மிகத் தரக்குறைவாகக் கேவலப்படுத்துகின்றது என்பதாலும், இது நிராகரிக்கப்பட வேண்டும்.

உமர் (ரலி) அவர்களை இது எப்படிக் கேவலப்படுத்துகிறது? அண்ணல் நபி (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றி, யூதர்களின் நிழல் கூட தன்மீது படியாமலும், படராமலும் வாழ்க்கையை நடத்திச் சென்ற உமர் (ரலி) அவர்கள் பாழாய்ப் போன யூதர்களின் பாதையைப் பின்பற்றி தொழத் தடைவிதித்தார்கள் என்று மோசமான சிந்தனையை அல்லவா இது நம்மிடம் பதியவைக்கின்றது என்ற அடிப்படையில் இது நிராகரிக்கப்பட வேண்டிய கருத்தாகும். இந்த ஆதாரமற்ற செய்தியைக் கொண்டு மார்க்கமாகக் கூறுவது மார்க்கத்தில் விளையாடுவதாகும்.
இவர்கள் ஆதாரமாக எடுத்து வைக்கும் செய்திக்கு நேர்முரணாக ஆதாரப்பூôவமான செய்தியை புகாரியில் காண்கின்றோம்

உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் சுப்ஹு, இஷா தொழுகை களை பள்ளியில் ஜமாஅத்தாக தொழச் செல்வார்கள். அவரிடம் (உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதை தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட போது, அதற்கு, அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (900)

உங்கள் மனைவியர் (பள்ளிக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அதை மறுக்க வேண்டாம்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (873)

என்ற ஹதீஸின் அடிப்படையிலும் தன்னைத் தன் கணவர் உமர் (ரலி) அவர்கள் தடுக்க முடியாது, தடுக்கவும் மாட்டார்கள் என்று பள்ளிக்குச் சென்று வரும் உமர் (ரலி) அவர்கள் மனைவியின் கூற்று, ஜமாத்துல் உலமா எடுத்து வைக்கும் கூற்றுக்கு நேர் முரணான கருத்தாகும் என்பதை நாம் இங்கு அறிந்து கொள்ள வேண்டும்.
இங்கு இன்னொன்றையும் நாம் விளங்க வேண்டும். உமர்(ரலி) அவர்கள் தடுத்தார்கள் என்றே ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் , அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இத்தனை ஹதீஸ்களையும் ஓரங்கட்டிவிட்டு, உமர் (ரலி) அவர்களின் சொல்லை எடுக்க வேண்டும் என்று சொல்லுவதின் மூலம் உமர்(ரலி) அவர்கனை நபி (ஸல்)     அவர்களை விட உயர்த்தியதாக ஆகாதா? இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா?

பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி (ஸல்) அவர்கள் (இன்று ) கண்டறிந்தால், பனூ இஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போன்று இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி 869)

பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்ற கருத்தையல்லவா இந்த செய்தி தருகின்றது என்று கேட்கலாம்.
அதிகமான சேட்டை செய்யும் தன் தம்பியைப் பார்த்து அண்ணன், நம்முடைய தகப்பனார் உயிரோடு இருந்திருந்தால் உன்னைக் கொன்றிருப்பார் என்று சொல்லும் போது நாம் என்ன விளங்கிக் கொள்வோமோ அதைத் தான் நாம் இங்கு விளங்க வேண்டும். பெண்களிடம் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியங்களை ஆயிஷா (ரலி) அவர்கள் காணும் போது அதைக் கண்டு பொறுக்காமல் இப்படியொரு கருத்தைத் தெரிவிக்கின்றார்கள். என்பதை நாம் தெளிவாகவே உணர முடிகின்றது.

 ஆலிம் பெருமக்கள் (?) சிந்திக்கத் துவங்கி பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்பது போன்ற முத்துக்களைச் சிந்தவும் செய்வார்கள் என்ற காரணத்தால் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் இவ்வாறு ஒரு நிரந்தரக் கட்டளையைப் பிறப்பிக்கச் செய்துள்ளான்.
அல்லாஹ்வின் பெண் அடியார்களான    (பெண்கள்) பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (900)
இவ்வளவு சான்றுகளைக் கண்ட பிறகும் நபியவர்களின் கட்டளைக்கு மாற்றமாகச் செயல்படுவது நியாயமா என்பதை உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெண்கள் மாதவிடாய் போன்ற துப்புரவற்ற காலகட்டங்களில் பள்ளிக்கு வரஇயலாது. இந்த நிலையை நம்மால் கண்டறியவும் முடியாது. எனவே பெண்களை பள்ளிக்கு வரவிடமால் தடுப்பதே சிறந்ததாகும் என சிலர்  கூறுகின்றனர்.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட குளிப்புக்கடமையான நிலையில் பள்ளிக்கு வருவதற்கு மார்க்கத்தில் தடையுள்ளது. ஒருவன் குளிப்புக் கடமையான நிலையில் இருக்கிறானா? இல்லையா? என்பதையும் நம்மால் கண்டறியவும் முடியாது. எனவே ஆண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என இவர்கள் தடைவிதிப்பார்களா?
இப்படிப்பட்ட தேவையற்ற காரணங்களைக் கூறி பெண்கள் பள்ளிக்கு வருவதற்கு தடைவிதிப்பது நபி வழிக்கு மாற்றமான நடைமுறையாகும்.

பெண்களும் பெருநாட்களும்

நபி (ஸல்) அவர்களுடைய காலகட்டத்தில் சாதரண நாட்களிலேயே பெண்கள் பள்ளிக்கு வந்து ஐவேளை தொழுகைகளை நிறைவேற்றி யிருக்கிறார்கள் என்பதற்கு நாம் எண்ணற்ற சான்றுகளைக் கண்டோம்.

சாதாரண நாளிலேயே பெண்கள் பள்ளியில் வந்து தொழலாம் எனும் போது பெருநாளில் தொழலாமா? என்ற கேள்வி அடிபட்டு போய்விடுகின்றது. பெண்களுக்கு என்று உள்ள உபாதையான காலகட்டங்களில் பள்ளியில் மட்டுமல்லாமல் வீட்டிலும் தொழமுடியாது. இக்காலகட்டத்தில் மட்டும் பள்ளிக்கு வரமுடியாது அவ்வளவுதான். இது போன்ற காலகட்டங்களில் பெண்கள் பீடைகள் என்று கருதி வீட்டின் மூலையில் முடக்கி வைத்து முக்காடிட்டு அழச் செய்யாது இந்த மார்க்கம்.

அன்னை ஆயிஷா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு சென்றிருந்த போது மாதவிலக்காகி விடுகின்றார்கள். அப்போது அந்த நிலையை எண்ணி அன்னையார் அழும்போது,
நீ மாதவிலக்காகி விட்டாயா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஆதமின் பெண் மக்களுக்கு அல்லாஹ் விதித்திருக்கும் உபாதையாகும் இது. ஹாஜிகள் செய்யும் எல்லா வணக்கங்களையும் செய்து கொள்க. ஆனால் நீ குளிக்கும் வரை தவாஃப் மட்டும் செய்யாதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (294)

அண்ணலாரின் ஆறுதல் மிக்க இந்த வார்த்தைகள் இது பெண்கள் கவலைப்பட்டு கண்ணீர் சிந்த வேண்டிய சாபத்திற்குரிய காரியம் இல்லை என்பதைக் காட்டுகிறது.
இது போன்ற கால கட்டங்களில் பெண்கள் பெருநாளன்று கவலைப்பட்டு வீட்டில் முடங்கி விடக்கூடாது. அதே சமயத்தில் இந்த நிலையில் பள்ளிக்கும் வரஇயலாது என்பதாலோ என்னவோ அந்தத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் திடலுக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். ஆனால் அதே சமயம் தொழும் போது தொழுமிடத்தை விட்டும் தள்ளியிருக்க வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாய் உள்ள பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும் படி எங்களை ஏவினார்கள். மாத விடாயுள்ளவர்கள் தொழும் இடத்தை விட்டு விலகியிருப்பார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)  நூல் : புகாரி (981)

ஆடையில்லாத பெண்ணுக்கு ஆடைவழங்குதல்
நாங்கள் இரு பெருநாட்களிலும் தொழுமிடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களை தடுத்துக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு பெண்வந்து பனீ கலஃப் வம்சத்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரது சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக இந்தச் செய்தியை அறிவித்தார். (அவருடைய அறிவிப்பில் பெருநாள் தொடர்பாக இடம் பெற்ற செய்தி இதோ)
உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை யளிப்போம். நோயாளிகளைக் கவனிப்போம். நான் நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா? எனக் கேட்டேன். அதற்கு அவளது தோழி தனது உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 324)

அடுத்த பெண்ணுக்கு ஆடையில்லாவிட்டால் கூட ஆடையை கொடுத்து திடலுக்கு வரச் சொல்கிறார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இது பெருநாள் தொழுகை பெண்கள் கண்டிப்பாகக் கலந்து  கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

பெண்கள் பள்ளிக்கு வருவது தொடர்பான ஏராளமான சான்றுகளைக் கண்டோம். இவ்வளவு சான்றுகளைக் கண்ட பின்பும் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்க முயன்றால்...
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழை யும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர் களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
(அல்குர்ஆன் 2:114)

என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை அலட்சியமாகக் கருதிவிட வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts