Tuesday 5 February 2013

மனைவியை அடிப்பது கூடுமா ?

மனைவியை அடிப்பது ஆண்மையா?

மக்களுக்கு செய்திகளைத் தெரிவிக்கும் ஊடகத் துறையில் பாதிக்கு மேல் செய்திகள் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தாங்கிய செய்திகளாகத் தான் உள்ளன. இதில் பத்திரிகைகள், தொலைக்காட்சி என்ற வித்தியாசமில்லாமல் இரண்டிலுமே சம அளவு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தெரிவிக்கும் செய்திகள் இடம் பெறுகின்றன.
தொலைக்காட்சிகளில் சற்றுக் கூடுதலாக செய்திகள் மட்டுமின்றி நெஞ்சங்களைப் பதற வைக்கும் படங்களையும் பார்க்க முடிகின்றது.

தினமும் பெண்களை ஆண்கள் கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தும் வன் செய்திகளுக்கு ஊடகங்களில் பஞ்சமில்லை என்ற நிலை ஒரு புறம்; யதார்த்தமான இந்நிலையை மிகவும் மிகைப்படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் சின்னத்திரைகளில் காட்டி, பெண்களை சீரியல்களின் அடிமைகளாக மாற்றி வரும் கொடுமையும் நடந்து வருகின்றது.

மிகவும் கேவலத்திற்குரிய விஷயம் யாதெனில் மக்கள் மத்தியில் அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் பொது வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பிரபலங்கள் கூட மனைவியை அடித்துத் துன்புறுத்தும் குற்றச்சாட்டிலிருந்து விதிவிலக்கு பெறவில்லை.

இறை நெறியான இஸ்லாத்தை வாழ்வு நெறியாகக் கொள்ள வேண்டிய முஸ்லிம்களில் சிலரும் மனைவிகளை அடிப்பது மார்க்கத்தில் தவறா? என்று அறிவில்லாமல் வினவுகின்றனர்.
குடும்ப வாழ்க்கையில் சச்சரவுகள் ஏதும் எழா வண்ணம் அமைதியாக வாழ்வதற்கு அனைத்து வழி முறைகளையும் வகுத்துத் தந்த இஸ்லாமிய மார்க்கம் இவ்வமைதி நெறிகளையும் மீறி மனிதன் தவறிழைத்து குடும்ப வாழ்வில் சச்சரவுகளை ஏற்படுத்திக் கொண்டால் அதை சுமுகமான முறையில் களைவதற்கு வழிமுறைகளைக் கூறுகின்றது.
பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:34)

பிணக்கு ஏற்பட்டால் இஸ்லாம் எடுத்த எடுப்பிலேயே அடிக்கச் சொல்லவில்லை. அழகான வழி முறைகளைக் கூறுகின்றது.

அவை:

 1. அறிவுரை கூறுவது.

2. படுக்கையிலிருந்து தற்காலிகமாக நீக்குவது.

3. அடிப்பது.

எடுத்து எடுப்பிலேயே அடிக்க அனுமதிக்காமல் அதற்கு முன் இரு வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று போதிக்கின்ற இஸ்லாம் அப்படிக் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளையும் விளக்குகின்றது.

கணவனுக்கு மனைவியின் மீது உள்ள கடமையைப் பற்றிக் கேட்கப்ட்டது. "நீ உண்ணும் போது அவளுக்கு உணவளி! நீ உடுத்துவது போல் அவளுக்கு ஆடையை அவளுக்கு வழங்கு! முகத்தில் அடிக்காதே! கேவலமாகத் திட்டாதே! வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்கும்படி நடக்காதே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அபூதாவூத் 1830)

எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும் காயம் ஏற்படும்படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். (நூல்: புகாரி 1294, 1297)

இவ்வளவு தெளிவான வழி முறைகளைப் பேண வேண்டிய முஸ்லிம்களில் சிலரும் மனைவியை அடித்து நோவினை செய்கின்றனர். அடிப்பது தான் ஆண்மைக்கு (?) அடையாளம் என்று நினைத்து விட்டார்கள் போலும்.

மனைவி என்பவள் உடல்ரீதியாகப் பலவீனமானவள் என்பதால் அவளுடைய சிலகுணங்களைப் பிடிக்கவில்லை என்றாலும் பிடித்த குணங்களைக் கொண்டு திருப்தி கொண்டு, மன நிறைவோடு வாழ்வதில் தான் ஆண்மை உள்ளது என்கிற ரீதில் தான் இஸ்லாமிய போதனைகள் உள்ளன.

ஒருவன் தன்னுடைய வாழ்வில் அதிக நேரத்தைக் குடும்பத்தில் தான் செலவிடுகின்றான் என்ற நிலையிலிருந்தும் தன்னுடைய குடும்பத்தாரிடம் நற்சான்று பெறுபவர் தான் உங்களில் நல்லவர் என்ற  நபி (ஸல்) அவர்களின் உயர்தரமான போதனை இருந்தும் இவ்வாறு மனைவியிடம் கொடூரத்தை சிலர் காட்டுவதற்கு அவர்களின் மார்க்க அறியாமை தான் காரணம்.

இவ்வாறு அடித்துக் கொடுமைப் படுத்துவது மட்டுமின்றி குடும்ப வாழ்க்கையில் எழும் பல பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய மார்க்க ஞானமின்றி மார்க்கம் சொல்லித் தராத, மனித அறிவு ஏற்றுக் கொள்ளாத பல செயல்களில் ஈடுபட்டு அவை பத்திரிகைகளில் செய்திகளாக வந்து இஸ்லாத்தைக் களங்கப்படுத்தும் அவல நிலையை முஸ்லிம்களில் சிலர் செய்து வருகின்றனர்.
எனவே மார்க்க அறிஞர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் வெள்ளி மேடைகள் மட்டுமின்றி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தங்களுடைய நாவு மற்றும் எழுத்துக்களின் மூலமாக இஸ்லாம் கூறும் குடும்பவியலை, குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்து எடுத்துக் கூற வேண்டும்.

இது மட்டுமின்றி இது பற்றி ஞானமுள்ள பெண்மணிகள் தங்களுடைய அறிவை தங்களளவில் நிறுத்திக் கொள்ளாமல் அறியாத பெண்மணிகளுக்கும் எத்தி வைக்க வேண்டும்.
அத்தோடு மட்டுமில்லாமல் பத்திரிகைகள் இவ்வாறான செய்திகளை வெளியிடும் போது பெண்களே தங்களது எழுத்துக்களால் உண்மை போதனைகளை எடுத்துரைக்க வேண்டும்.
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)

வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்துத் தந்த போதனைகள் படி வாழச் செய்வானாக!

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts